மகிழ்ச்சியான நாட்கள்
அந்த நாட்கள் நெ/மகிழ்ச்சியானவை
இன்று தீபாவளி. காலையில் என் மனைவி உஷா, தலையில் காய்ச்சிய நல்லெண்ணையை வைத்த போது, அம்மா அப்பாவின் நினைவு வந்தது. "சீதா கல்யாணம் வைபோகமே", "கௌரி கல்யாணம் வைபோகமே" என்று அம்மா பாட, அப்பா தலையில் எண்ணெய்யை வைத்து தேய்த்து விடுவார். அவரின் குண்டு தொப்பை, அப்பொழுது அசையும் விதமே ஒரு அழகு தான். அக்கா தேவி, அத்திம்பேருடன் இரண்டு எவர்சில்வர் அடுக்கு நிறைய பட்சணங்களுடன், காலை 9 மணி சுமாருக்கு வருவாள். ஒன்றில் மைசூர் பாகு மிக்சர் முதலிய பல்வேறு பட்சணங்களும் மற்றொன்றில் விதவிதமான பஜ்ஜி வகையறாக்களும் இருக்கும். அது வரும் வரையில் நாங்கள் அனைவரும் (அம்மா, அப்பா, நான், நாலு அண்ணன்கள், தங்கை கீதா மற்றும் மன்னிகள்) காத்திருப்போம். மகிழ்ச்சியான அந்த நாட்கள் திரும்ப வரப்போவதில்லை என்றாலும் மனத்தில் நிரந்தர சந்தோஷத்தை கொடுத்தவை அவை. நேற்றைக்கு முந்தைய நாள் அம்மாவின் 'சிரார்த்தம்' சென்னையில் முடித்துவிட்டு வரும்பொழுது, கீதா 'சரோஜா மாமியின் பையன் குமார் தயார் செய்தது' என்று ஒரு மிக்சர் பொட்டலத்தை கொடுத்தாள். அதை இன்று பிரித்ததும் சுவை மிகுந்ததாக இருந்தது. பணம் கைம்மாறு பெற்றதும், கைம்மாறு கொடுத்ததுமான இரண்டு நிகழ்ச்சிகளும் நினைவுக்கு வந்தன. அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
1. அம்மா தாராளமாக செலவு செய்பவள். மாதக்கடைசியில் 28/29 தேதிகளில் என்னை பக்கத்து தெருவில் இருக்கும் சரோஜா மாமியிடம் பத்து ரூபாய் கடன் வாங்கி வரும்படி சொல்வாள். நான் அங்கு செல்லும்பொழுது, மாமி வேறு யாருடனோ பேசிக் கொண்டிருப்பாள். என்னை பார்த்ததும் சிரித்துக் கொண்டே, பிறர் அறியாத வண்ணம், என் சட்டைப் பையில் பத்து ரூபாயை வைத்துவிட்டு, "காபி சாப்பிட வந்தியா" என்று காப்பி கொடுப்பாள். நான் பேச்சற்று விடுவேன். அடுத்த மாதம் இரண்டாம் தேதி அம்மா, பணம் திருப்பிக் கொடுத்து விட்டு வரச் சொல்வாள். மாமியின் உதவும் தன்மையை விட, மற்றவர்கள் முன் நான் கடனுக்கு வந்திருக்கிறேன் என்பது தெரியாத விதமாக என்னை நடத்தியது, இப்பொழுதும் மனதில் ஒரு நெகிழ்வை உண்டாக்குகிறது.
2. திரு. மரிய செல்வம் என்னுடன் SBT BASANT NAGAR கிளையில் கூட வேலை பார்த்தவர். கொஞ்சம் திக்கிப் பேசுவார். ஆங்கிலம் சரளமாக வரும். வேலையில் கெட்டிக்காரர். வவுச்சர், ரெக்கார்ட்ஸ், தபால் அனுப்புவது என்று எந்த பிரிவிலும் திறமையாக செயல்பட்டவர். பலவீனமான உடல் நலம் கொண்டவர். வீட்டில் வறுமை என்றாலும், வெளியில் காட்டிக் கொள்ளாதவர். அடிக்கடி லீவில் போய்விடுவார். ஒரு முறை, ஒரு மாதம் வங்கிக்கு வராதவர், தீபாவளிக்கு முந்தைய தினம் வந்து என்னிடம் 100 ரூபாய் கடன் கேட்டார். அவர் வராததால் ஏற்பட்ட வேலைப் பளு காரணமாக கோபத்தில் 'பணம் தர முடியாது' என்று கூறிவிட்டேன். சிறிது நேரம் கழித்து என் மனம் அமைதி இழந்ததால், அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வர இன்னொருவரை அனுப்பி, பணம் கொடுத்தேன். சம்பளம் வந்தவுடன் பணத்தை திரும்பக் கொடுத்து விட்டார். காலையில் நான் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக வருத்தப்படவில்லை. மாறாக என் நண்பரிடம் "விசுவுக்கு ஏதோ கோபம்ப்பா, அதனால தான் திட்டிட்டாரு, எப்பவும் எனக்கு அவர் தான் உதவி பண்றார்" என்றும் கூறியிருக்கிறார். இதை என் நண்பர் என்னிடம் பிறிதொரு நாளில் சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. சரியாக 20 வருடம் கழித்து நான் சென்னையில் SBT MOUNT ROAD கிளையில் உதவிப் பொது மேலாளராக இருந்த பொழுது திரு. மரிய செல்வம் இறந்து விட்டதாக தகவல் வந்தது. அதிர்ச்சியுடன் அங்கு சென்று அவரது இறுதிச் சடங்கில் பங்கு பெற்றேன். கடவுளிடம் வேண்டினேன் "ஒரு சிலரை மேலும் மேலும் செல்வம் படைத்தவராக ஆக்குவதை விட, ஏன் மனித குலம் முழுவதையும் வறுமையில் இருந்தும் வியாதிகளில் இருந்தும் விடுவித்து நல்வாழ்வு வாழ அனுமதிக்க கூடாது" என்று. விடை எப்பொழுதும் கிடைக்கப் போவதில்லை.
நல்லவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள், அவர்கள் மூலம் உலகம் இயங்கிக் கொண்டே இருக்கும். நாம் நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்போம் "நல்லவர்களை அனுப்பி வைத்த இறைவன் அவர்களை வறுமையில் இருந்தும் வியாதிகளிலிருந்து என்றேனும் மீட்பான்" என்று.
தீபாவளி நல்வாழ்த்துகள்.
விஸ்வநாதன்.
31. 10. 24
Ohooo great meaningful really true visu your recollection memorable.
ReplyDeleteதிரு. மரியோ செல்வத்தைப் பற்றி படித்தவுடன் மனம் சஞ்சலம் அடைந்தது. கடன் வாங்குவதும் கொடுப்பதும் காரணமாக நட்பு தொடரும்
ReplyDeleteஐயா, அருமையான பதிவு. மிகவும் நன்றாக இருந்த்து.
ReplyDeleteSuper, sir. Took me back to my school/college days
ReplyDelete